புகைப்படங்களை மொபைல் தவிர்த்து வேறு எங்கு பாதுகாப்பாகச் சேமித்து வைக்கலாம்?

 இன்று சாதாரணமாக நாம் வாங்கும் அடிப்படை என்ட்ரி லெவல் மொபைல் போன்களே 32 GB ஸ்டோரேஜ் வசதியுடன்தான் விற்பனைக்கு வருகிறது. அதிகபட்சமாக ஆப்பிள் போன்களில் 1 TB வரையிலும், ஆண்ட்ராய்ட் போன்களில் 512 GB வரையிலும் ஸ்டோரேஜ் வசதிகளைக் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். சராசரியாக 64 GB ஸ்டோரஜ் கொண்ட போன்களைத்தான் நாம் பயன்படுத்துகிறோம். 


அவையும் நமக்குப் போதுமானவையாக இல்லை. நாம் பயன்படுத்ததும் தகவல்களின் அளவு இன்று அதிகரித்துவிட்டன. கோப்புகள், புத்தகங்களும்கூட பிடிஎஃப்களாக மாறி நம்முடைய மொபைல் போனில் அமர்ந்திருக்கின்றன. இன்று நாம் புகைப்படங்கள் எடுப்பது நினைவுகளுக்காக மட்டுமல்ல, குறிப்புகளுக்காகவும்தான். 


எந்தவொரு தகவலையும், எழுத்தில் குறித்துக்கொள்வதைவிட அதனைப் புகைப்படமாக எடுத்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் நேரத்தில் எளிதாக எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும், எழுத்துக் குறிப்புகளைப்போல அதனைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்கிற தேவையும் இல்லை. எனவே, ஸ்டோரேஜுக்கான நமது தேவைகள் அதிகரித்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.



புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் இதர டேட்டாவை சேமித்து வைப்பதற்கு இரண்டு மாற்றுவழிகள் இருக்கின்றன. ஒன்று எக்ஸ்டர்னல் ஹார்டு டிஸ்க்கை (External Hard disk) பயன்படுத்தலாம். ஒவ்வொருவரும் அவர்கள் சேமித்து வைக்க விரும்பும் தகவல்களின் அளவுக்கு ஏற்ப இவற்றை வாங்கிக் கொள்ளலாம். 


1 TB என்பது தற்போது பொதுவாக அனைவரும் வாங்கும் அளவாக இருக்கிறது. நான் மிகவும் முக்கியமான தகவல்களை மட்டும் சேமிப்பதற்காகவே மாற்றுவழிகளை நாடுகிறேன் என்பவர்கள் 500 GB அளவிற்குக்கூட வாங்கிக் கொள்ளலாம். அதிகமான தகவல்களைச் சேமித்து வைக்க விரும்புபவர்கள் 2 TB அல்லது அதற்கு மேலான அளவுகளிலும் கிடைக்கிறது. 1 TB ஹார்டு டிஸ்க்கின் விலை 4,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையான விலைகளில் கிடைக்கிறது.

மற்றொரு வழி க்ளவுட் ஸ்டோரேஜ் (Cloud Storage) வசதி. இந்த வசதியானது கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட்ஃபோன் மற்றும் இணையப் பயனர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே நாம் அனைவரும் இந்த க்ளவுட் ஸ்டோரேஜ் முறையைப் பயன்படுத்தி வந்திருப்போம், ஆனால், இதனை முதன்மையான தேர்வாக நாம் பயன்படுத்தியது இல்லை. தற்போது க்ளவுட் ஸ்டோரேஜையும் முதன்மையான தேர்வாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள் ஸ்மார்ட் போன் பயனர்கள்.



கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் அனைத்துமே க்ளவுட் ஸ்டோரேஜ் வசதியை வழங்கி வருகின்றன. கூகுள் ட்ரைவின் அப்டேட்டட் வெர்ஷனாக, ட்ரைவைவிட இன்னும் கொஞ்சம் ப்ரொபஷனலாக கூகுள் ஒன் (Google One) க்ளவுட் ஸ்டோரேஜ் வசதியை 2018-ல் அறிமுகப்படுத்தியது கூகுள். ஆப்பிள் பயனர்களுக்கு ஐக்ளவுட் (iCloud) வசதியைப் பற்றித் தனியாகச் சொல்லத் தேவையில்லை, மிகவும் பாதுகாப்பான க்ளவுட் ஸ்டோரேஜ் வசதி. மைக்ரோசாப்ட், ஒன் ட்ரைவ் (One Drive) என்ற க்ளவுட் ஸ்டோரேஜ் வசதியை வழங்கி வருகிறது.

ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் அனைவருமே ஒன்று ஆப்பிள் இல்லையென்றால் ஆண்ட்ராய்ட் மொபைல்களைத்தான் பயன்படுத்துவோம். எனவே, மேற்கூறிய கூகுள் அல்லது ஆப்பிளின் ஏதாவது ஒரு க்ளவுட் ஸ்டோரேஜ் வசதியை நாம் இலவசமாகவே பயன்படுத்தத் தொடங்கலாம். உங்களிடம் கூகுள் கணக்கு இருந்தாலே 15 GB ஸ்டோரேஜ் வரை இலவசமாக அளிக்கிறது கூகுள். அதற்கு மேல் ஸ்டோரேஜ் வசதி தேவை என்றால் சந்தா முறையில் மாதக் கட்டணம் செலுத்திப் பயன்படுத்திக் கொள்ளலாம். 100 GB ஸ்டோரேஜ் வசதிக்கு மாதம் 130 ரூபாய் சந்தா செலுத்திப் பயன்படுத்தலாம். அதிகபட்சமாக 2 TB வரையிலான ஸ்டோரேஜ் வசதிக்கு மாதம் 650 ரூபாய் செலுத்த வேண்டும்.



அதேபோல் ஆப்பிள் கணக்கு மற்றும் மைக்ரோசாப்ட் கணக்கைக் கொண்டு ஐ க்ளவுட் மற்றும் ஒன் ட்ரைவ் ஆகிய இரு சேவைகளிலும் அடிப்படையில் 5 GB வரை இலவச ஸ்டோரேஜ் வசதியைப் பெறலாம். அதற்கு மேல் ஐ க்ளவுட் என்றால் 50 GB-க்கு 75 ரூபாயும், 200 GB ஸ்டோரேஜுக்கு 219 ரூபாயும் மாத சந்தா செலுத்திப் பயன்படுத்திக்கொள்ளலாம். இவை தவிர ட்ராப்பாக்ஸ் போன்ற க்ளவுட் ஸ்டோர்ஜ் சேவையையே பிரதானமாக வழங்கக்கூடிய தளங்களையும் பயன்படுத்தலாம்.



No comments:

Powered by Blogger.